ஜவுளி உற்பத்தியாளர்கள், அரசு நிர்ணயத்த கூலியை தாமதிக்காமல் வழங்க வேண்டும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கூட்டமைப்புக் கூட்டம் அவிநாசி அருகே தெக்கலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு, சோமனூர் பகுதித் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பல்லடம் பகுதித் தலைவர் வேலுசாமி முன்னிலை வகித்தார்.
இதில், பல்லடம், சோமனூர், திருப்பூர் மற்றும் அவிநாசி பகுதிகளைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள், சோமனூர் ரக விசைத்தறி உரிமையாளர்களுக்கு 30 சதவீதமும், இதர ரக விசைத்தறி உரிமையாளர்களுக்கு 27 சதவீதமும் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என கடந்த 2014ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் தொழிலாளர் துறை இணை ஆணையரால் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து 6 மாதங்கள் மட்டுமே ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்கியுள்ளனர். அதன் பிறகு, மீண்டும் 2011ஆம் ஆண்டு நிர்ணயித்த பழைய கூலியையே வழங்கி வருகின்றனர். இது குறித்து பல முறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, 2014ஆம் ஆண்டு நிர்ணயித்த கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி டிசம்பர் 11ஆம் தேதி கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிப்பது, இது குறித்து 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் கூட்டு கமிட்டி கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.