நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று, கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் கங்கா எஸ்.சக்திவேல் தலைமை வகித்தார். திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
இதில், கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
நீட் தேர்வு நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசு பெயரளவுக்கு நீதிமன்றத்துக்குச் சென்று இப்போது அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வஷயத்தில் மாணவர் பாதிப்புக்குக் காரணமான சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
தமிழகத்தில் ஒருபோதும் பாஜக ஆட்சிக்கு வர முடியாது. நடிகர்களை நம்பி பாஜக தமிழக ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றார்.