எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மகளிர் திட்டம் சார்பில் உடுமலையில் பல்வேறு கலாசாரப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
உடுமலை, சிவசக்தி காலயில் உள்ள அமுதராணி திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் வீட்டு வசதி- நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
ஜூலை 22-ஆம் தேதி பல்லடத்தில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி, மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கான திறனறி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்போடு போட்டிகள் நடைபெறுகின்றன என்றார்.
மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சார்பில் கோலப்போட்டி, மாணவ, மாணவிகள் பங்கேற்ற யோகாசனப் போட்டி ஆகியவை நடைபெற்றன. மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்ன ராமசாமி, கோட்டாட்சியர் அ.சாதனைக் குறள், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கே.ஆறுசாமி, ஆர்.ஜி.ஜெகநாதன், மெட்ராத்தி நா.அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.