திருப்பூரில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது:
திருப்பூர், பாப்பநாயக்கன்பாளையம், ரோஜா நகரைச் சேர்ந்தவர் செல்லதுரை. பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கும் மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சேர்ந்த ஜெயப்பிரதா (26) என்பவருக்கும், 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஜெயப்பிரதாவுக்கு தாய், தந்தை இல்லை. கணவருடன் திருப்பூரில் வசித்து வந்தார்.
ஜெயப்பிரதாவின் நடவடிக்கை மீது செல்லதுரைக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயப்பிரதா மீது செல்லதுரை பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார். இதில் ஜெயப்பிரதா பலத்த காயம் அடைந்தார்.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயப்பிரதா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, செல்லதுரையை ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தனர்.