திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், பழவஞ்சிபாளையம், மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் கௌதம் (21). இவர் பழவஞ்சிபாளையத்தில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக கடந்த இரு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.
பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலை இருந்ததால் தொழிலாளர்கள் அனைவரும் பணியில் இருந்துள்ளனர். கௌதமும் பணியில் இருந்துள்ளார். பணியின்போது ஒரு டேபிளில் கௌதம் கை வைத்த தருணத்தில், மின் கசிவு காரணமாக கௌதம் மீது மின்சாரம் பாய்ந்தது.
அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. உடனே பிரதான மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, கௌதமைக் காப்பாற்ற அவர்கள் முயன்றனர். அதற்குள் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.