கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு சீரான குடிநீர் வழங்கக் கோரி ஊர் மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெருமாநல்லூர் அருகே, கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பாலாஜி நகர், குமரன் காலனி, நாதம்பாளையம், ஆண்டிபாளையம், வாஷிங்டன் நகர், கஸ்தூரிபா நகர், பொன்விழா நகர், விக்னேஷ்வரா காலனி, கணக்கம்பாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
வசித்து வருகின்றனர்.
இப்பகுதிகளுக்கு கடந்த ஒரு மாதமாக சீரான குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. மேலும் பாண்டியன் நகர் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியில் இருந்து கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு வழங்கப்படும் மேட்டுப்பாளையம் 2-ஆம் திட்டக் குடிநீர் விநியோகிக்கப்படாமல், வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இதனால், கணக்கம்பாளையம் ஊராட்சியில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பெருமாநல்லூர் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியிலிருந்து வாஷிங்டன் நகருக்கு வழங்கப்படும் ஒரு லட்சம் லிட்டர் குடிநீரும் விநியோகிக்கப்படாமல் உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருப்பூர்- பெருமாநல்லூர் சாலையில் கணக்கம்பாளையம் பிரிவு சந்திப்பில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ஆண்டிபாளையம் குருவாயூரப்பன் நகர், பொன்விழா நகரில் கட்டிமுடிக்கப்பட்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியையும், மேல்நிலைத்தொட்டியையும் உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும். பொதுமக்களின் பங்களிப்புடன் கணக்கம்பாளையம் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட 9 ஆழ்துளைக் கிணறுகளுக்கு உடனடியாக மின் மோட்டார் பொருத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற குடிநீர் வடிகால் வாரியத்தினர், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர், பெருமாநல்லூர் போலீஸார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பாண்டியன் நகர் குடிநீர் விநியோகத் தொட்டியிலிருந்து கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு அதிகபட்சமாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வாஷிங்டன் நகர் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிக்கு 2-ஆம் குடிநீர் திட்டக் குடிநீர் நாள்தோறும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.