வெள்ளக்கோவில் பகுதியில் தொழில் பாதிப்பு காரணமாக பழைய இரும்புக் கடைக்கு ஏராளமான விசைத்தறிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன.
வெள்ளக்கோவில் பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. விவசாயத்துக்கு அடுத்த படியாக இங்கு விசைத்தறித் தொழில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பெரும்பாலும் 64, 72, 80, 96, 113 இஞ்ச் தறிகள் அதிக அளவில் உள்ளன. இவற்றின் உரிமையாளர்கள் கரூர் போன்ற ஜவுளி நிறுவனங்களில் நூல் எடுத்து, கூலிக்குத் துணி வகைகளை நெசவு செய்து கொடுத்து வருகின்றனர். சொந்தமாக துணி உற்பத்தி செய்பவர்கள் மிகவும் குறைவு.
இந்நிலையில், நவீன வகை விசைத்தறிகள் வரவு, ஜவுளித் துறை மந்தம், ஜிஎஸ்டி வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விசைத்தறிகளுக்குத் தாராளமாக துணி உற்பத்தி செய்ய ஆர்டர் கிடைப்பதில்லை. வருமானம் குறைவு காரணமாக விசைத்தறித் தொழிலாளர்களும் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர்.
தொழிலைச் சரிவர நடத்த முடியாமல், கடன் சுமையால் பாதிக்கப்பட்ட பலர் விசைத்தறிகளை விற்பனை செய்ய முயன்று வருகின்றனர். புதிதாக யாரும் இத்தொழிலில் ஈடுபட விரும்புவதில்லை. பழைய தறிகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
இதனால் கிடைத்தது லாபம் எனும் நிலையில் விசைத்தறிகளை பழைய இரும்புக் கடைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.