வெளியூர் சோளத்தட்டு வரத்தால் விலை குறைந்திருப்பதால் பல்லடம், பொங்கலூர் பகுதியில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பல்லடம், பொங்கலூர் பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில் பிரதானமாக இருந்து வருகிறது. கடும் வறட்சியால், இப்பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட தீவனப் பயிர்கள் கருகியது. தீவன விளைச்சல் மற்றும் வரத்து குறைவால் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டது.
அதனால், சோளத்தட்டு விலை உயர்ந்தது. ஒரு கட்டு சோளத்தட்டு ரூ. 70 வரை விற்கப்பட்டது. இந்த விலைக்கு தீவனத்தை வாங்கி, கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் விவசாயிகள் திணறினர். இதனால், கழிவுப் பஞ்சு, அடர் தீவனம், வைக்கோல் போன்றவைகளை கால்நடைகளுக்கு உணவாக வழங்கிப் பராமரித்தனர். இவைகளுக்கும் கிராக்கி ஏற்பட்டு, விலை உயர்ந்தது.
இந்தக் கடுமையான நிலையில், தற்போது பருவ மழை தொடங்கியுள்ளதால் புல் வகைகள் செழித்து வளர்ந்து பசுந்தீவனப் பற்றாக்குறை நீங்கி உள்ளது. தென்மேற்கு பருவ மழையால் பெய்யத் தொடங்கியதால், சோளத்தட்டை இருப்புவைத்திருந்த வியாபாரிகள், விவசாயிகள் அதை விற்பனை செய்தனர். மேலும், சந்தைக்கு வெளியூர் சோளத்தட்டு வரத்தும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சோளத்தட்டு விலை வெகுவாக குறைந்துள்ளதால்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.