பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.சுசீலான் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.பால்ராஜ் கோரிக்கைகளை விளக்கினார்.
இதில், காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னரும், தகுதியானவர்களைத் தேர்வு செய்வதில் காலதாமதம் செய்யப்படுகிறது.
உடனடியாக, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 10, 20, 30 ஆண்டுகள் என பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியத்தை வழங்காமல், 2 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடும்ப சேமநல நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.