மூலனூரில் அரசுப் பேருந்துகளை முற்றுகையிட்டு மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூலனூரில், கரூர் சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இலவசப் பேருந்துப் பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. மூலனூர் பேருந்து நிலையத்திலிருந்து
காலை 7.40, காலை 8.20 மணிக்குப் புறப்படும் அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும், கடந்த இரண்டு வாரங்களாக இந்தப் பள்ளி அருகே பேருந்துகளை நிறுத்துவதில்லை. இப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாமல், அதற்கு முந்தைய பேருந்து நிறுத்தத்திலோ அல்லது பள்ளியைக் கடந்து அடுத்த பேருந்து நிறுத்தத்திலோதான்
பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், மூலனூர் பேருந்து நிலையத்தில் இந்த 2 பேருந்துகளையும் மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் சேர்ந்து முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீஸார்,பள்ளி அருகே பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். அதையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.