காங்கயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் பக்தர்களைத் தாக்கி வரும் குரங்கினைப் பிடித்து வனத்துக்குள் விடுமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவன்மலை முருகன் கோயிலில் குரங்குகள் உள்ளன. இவை மலையில் உள்ள மரங்களின் பழங்கள், பக்தர்கள் தரும் தேங்காய், உணவுப் பொருள்களைத் தின்று வருகின்றன. இந்நிலையில், கடந்த 3 நாள்களாக குரங்கு ஒன்று கோயிலுக்கு வரும் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் திரிந்து கொண்டிருக்கிறது.
மலைக் கோயிலில் உள்ள பூக்கடையில் வேலை பார்த்து வரும் நடராஜன் என்பவரது காலை திங்கள்கிழமை கடித்து கடுமையாக காயப்படுத்தியுள்ளது.
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, நடராஜனை காங்கயம் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில், அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் இந்தக் குரங்கைப் பிடித்து ஊதியூர் வனப் பகுதிக்குள் விடுமாறு காங்கயம் வனத் துறையினருக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.