ஊதியூர் அருகே, விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக குழாய் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்டனர்.
காங்கயம் தாலுகா, ஊதியூரை அடுத்துள்ள நிழலியைச் சேர்ந்தவர் சங்கர். விவசாயி. இவரது தோட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக பொதுத் தடத்தில் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சங்கரின் பக்கத்துத் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சதீஷ்குமார், அவரது தம்பி பூபதிராஜா ஆகியோர் குழாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த சங்கரின் உறவினர்கள் ஈஸ்ரவரன் (27), வெங்கடாசலம் (38), சுப்பிரமணியம் (55) ஆகியோர் சங்கருக்கு ஆதரவாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமாரும், பூபதிராஜாவும் ஈஸ்வரன், வெங்கடாசலம், சுப்பிரமணியம் ஆகியோரை சரமாரியாகக் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், உயர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஊதியூர் காவல் துறையினர் தலைமறைவான சதீஷ்குமார், பூபதிராஜா ஆகியோரைத் தேடி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ்குமார், பூபதிராஜா ஆகியோரைக் கைது செய்ய வலியுறுத்தி நிழலி பகுதி மக்கள், காங்கயம் டிஎஸ்பி.கிருஷ்ணசாமியிடம் சனிக்கிழமை புகார் தெரிவித்தனர்.