காங்கயம் அருகே வெள்ளரை பாறை பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில், குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பதால் வெளியேறும் புகை மண்டலத்தால் பகுதி மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
காங்கயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சேகரமாகும் குப்பை, சென்னிமலை சாலையில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. அங்கு குப்பைகள் நிறைந்தும், அதில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டும் வந்ததால் பொதுமக்கள் புகாரையடுத்து, காங்கயம்-தாராபுரம் சாலையில் உள்ள வெள்ளரை பாறை பகுதியில் திறந்த வெளியில் நகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
மேலும் இங்கு கொட்டப்படும் குப்பையை வெட்ட வெளியிலேயே நகராட்சி நிர்வாகம் தீ வைத்து எரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் இப்பகுதி எப்போதும் புகை மண்டலமாகவே காட்சியளிக்கிறது. இதை ஒட்டியே அர்த்தனாரிபாளையம், வீரணம்பாளையம், அழகு கவுண்டன்புதூர், கரியகவுண்டன்புதூர், மோளப்பாளையம், பகவதிபாளையம், பொத்தியபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை அமைந்திருப்பதால், புகை சூழ்ந்த இந்த சாலையில் எதிரே வரும் வாகனங்களை கவனிக்க முடியாமல் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இங்கு குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் நச்சுப் புகை காரணமாக, இப்பகுதி மக்கள் பல்வேறு சுவாசக் கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை கழிவு முதல் ரசாயன கழிவு வரை அனைத்தும் இங்கு எரிக்கப்படுகிறது. எனவே, குப்பைகளை எரிப்பதை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.