சீரான குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர், பல்லடம் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், பல்லடம் பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், திருமுருகன்பூண்டி பேரூராட்சி, 11-ஆவது வார்டுக்கு உள்பட்ட எம்.ஜி.ஆர். நகர், பழனியப்பா நகர், காமாட்சி நகர், கணபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதிகளில் கடந்த 3 வாரங்களாக சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அங்குள்ள 2 ஆழ்துளைக் கிணறுகளிலும் குறைந்த அளவே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறதாம். இதனால் பாதிப்புக்குள்ளான அந்தப் பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன், அம்மாபாளையம் - ராக்கியாபாளையம் சந்திப்பு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீஸார், பேரூராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குடியிருப்பு பகுதிகளில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும், குடிநீர் சீராக விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு சுழற்சி முறையில் சீராக தண்ணீர் வழங்கப்படும் என்றும், அதுவரை லாரிகள் மூலமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செஞ்சேரிப்புத்தூரில்: பல்லடம் அருகே செஞ்சேரிப்புத்தூரில் குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம், செஞ்சேரிபுத்தூர் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
 இப்பகுதிக்கு கடந்த 15 நாள்களாக அத்திக்கடவு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட அக்கிராம மக்கள் காலிக் குடங்களுடன் உடுமலை- பல்லடம் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி, நெகமம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மீனாட்சி உள்ளிட்ட அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஒரிரு நாள்களில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர். இப்போராட்டம் காரணமாக உடுமலை - பல்லடம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com