கறிக்கோழிப் பண்ணைகளில் இறக்கும் கோழிகளை எரிக்க பல்லடம் வெங்கிட்டாபுரத்தில் அமைக்கப்பட்ட எரியூட்டு மையம் பயன்பாடின்றி உள்ளது.
பல்லடம் பகுதியில் கறிக்கோழி உற்பத்தித் தொழில் பிரதானமாக உள்ளது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் இப்பகுதியில் உள்ளன. தண்ணீர் பற்றாக்குறை, வெயிலின் தாக்கம், நோய்த் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பண்ணைகளில் கோழிகள் இறக்கின்றன. அவற்றை முறையாக அழிப்பதற்காக பல்லடம் வெங்கிட்டாபுரத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பில் கோழிகள் எரியூட்டு மையம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த மையம் செயல்பாட்டுக்கு வரவில்லை. அரசு நிதியும் வீணாகியுள்ளது.
இதனால் பண்ணைகளில் இறக்கும் கோழிகளை சிலர் முறையாக அகற்றாமல் சாலையோரங்களிலும், திறந்தவெளி பரப்பிலும் வீசி விடுகின்றனர்.
மேலும், மலிவு விலையிலும் விற்று விடுகின்றனர். சாலையோரங்களில் வீசப்படும் இறந்த கோழிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பல்லடம் வெங்கிட்டாபுரத்தில் அமைக்கப்பட்ட கோழிகள் எரியூட்டு மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.