இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்துள்ளதாகவும், இந்நிலங்களை மீட்டு, வீடு இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அங்கு நடைபெற்று கொண்டிருந்த ஜமாபந்தியில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பழனியம்மாளிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பழனியம்மாள், கோரிக்கைகள் குறித்து உடனடியாக தணிக்கை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.