திருப்பூரில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அரசு அலுவலரின் இருசக்கர வாகனம் திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டத்துக்கு உள்பட்ட லக்கமநாயக்கன்பட்டி அருகேயுள்ள கம்பளியம்பட்டியைச் சேர்ந்தவர் பி.செந்தில்நாதன் (32). இவர், திருப்பூர், முருங்கப்பாளையம் அருகேயுள்ள குமார் நகரில் தங்கி, ஆட்சியர் அலுவலகத்தில் "சி' பிரிவில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், மாவட்ட மக்கள் குறைகேட்புக் கூட்டம் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், செந்தில்நாதன், தனது இருசக்கர வாகனத்தை, ஆட்சியரகத்தின் பின்புறமுள்ள வங்கி ஏடிஎம் மையத்தின் முன்பு நிறுத்தி விட்டு, அலுவலகத்துக்கு சென்று விட்டார். பணி முடிந்து மாலை வந்துபார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.