அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
அவிநாசி, மங்கலம் சாலை காசிகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் செந்தில்குமார் (38). பந்தல் அமைக்கும் பணி செய்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இருசக்கர வாகனத்தில் மங்கலத்தில் இருந்து அவிநாசி நோக்கி செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தார். அவிநாசி உமையஞ்செட்டிபாளையம் பிரிவு அருகே வரும்போது, அவிநாசியில் இருந்து மங்கலம் நோக்கி சென்ற கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.