பல்லடம் அருகே 63வேலம்பாளையத்தில் பவர் டெக்ஸ் இந்தியா சார்பில் விசைத்தறியாளர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் 63 வேலம்பாளையம் சங்கத் தலைவர் பத்மநாதன்,பொருளாளர் கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் வேலுச்சாமி பேசியதாவது: விசைத்தறிகளை மேம்படுத்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு திட்டங்களில் சில விசைத்தறியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளவை. அவற்றில் பொது பயன்பாட்டு மையம் என்பது ஜவுளி தொழிலை மேம்படுத்தும். அதனை பல்லடம் பகுதியில் அமைக்க கடந்த ஓர் ஆண்டாக முயற்சி செய்து வருகிறோம். இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது அதற்கான இடம் தேர்வு நடைபெற்று வருகிறது. பொது பயன்பாட்டு மையம் அமையுமானால் ஜவுளி விற்பனைக்கு சந்தைப்படுத்த நாம் யாரையும் எதிர்பார்க்க வேண்டியது கிடையாது. உள்நாட்டு வர்த்தகம் அதிகரித்து ஜவுளி தொழில் மேலும் வளர்ச்சி அடையும் என்றார்.
கூட்டத்தில், விசைத்தறிகளை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்கள் குறித்தும் பவர் டெக்ஸ் இந்தியா திட்டங்கள், சேவை வரிகள் குறித்தும் காணொலிக் காட்சி மூலம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. பல்லடம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்றனர். சிட்ரா விசைத்தறி பணி மையத்தின் பல்லடம் பொறுப்பு அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.