நள்ளிரவில் வழிப்பறிக் கும்பலை விரட்டிப் பிடித்த காவலர்கள்: காவல் ஆணையர் பாராட்டு
திருப்பூரில் நள்ளிரவில் வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கும்பலை விரட்டிப் பிடித்த போலீஸாரை மாநகரக் காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
திருப்பூர், 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட ஏ.பி. நகர் பகுதியில் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு, தனியார் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் பணி செய்து வரும் அஜய் பேகரா, போலோராம் நாயக் ஆகியோர் பணி முடித்து, தாங்கள் தங்கியுள்ள வீட்டின் அருகில் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த மூன்று பேர் கத்தியைக் காட்டி மிரட்டி , அஜய் பேகராவின் செல்லிடப்பேசியையும், போலோராம் நாயக்கிடம் இருந்த பணம் ரூ. 2,500-ஐயும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். வழிப்பறியால் பாதிக்கப்பட்டோர் மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனே தகவல் அளித்தனர். காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, அப்பகுதியில் இருசக்கர வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சங்கர் பிரபு, காவலர் சுரேஷ், தமிழ்நாடு சிறப்புப் படை காவலர் பிரசாத், காவலர் மோகன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ரோந்துக் காவலர்கள் துரிதமாகச் செயல்பட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து, பாதிக்கப்பட்டோரிடம் விசாரித்து, உடனடியாக சுமார் 2 கி.மீ. தொலைவுக்குத் துரத்திச் சென்று, வழிப்பறியில் ஈடுபட்ட திருப்பூர், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த ஜீவா, வலையங்காடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் 17 வயது சிறுவனைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்லிடப்பேசி, பணம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை உடனடியாகப் பிடித்த ரோந்துக் காவலர்களை மாநகரக் காவல் ஆணையர் புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினார். அவர்களுக்கு ரூ. 5,000 வெகுமதி வழங்கப்பட்டது.