பல்லடம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடத்துக்கு திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி, அவிநாசி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் பேருந்துகள் வந்து செல்கின்றன. ஒருசில பேருந்துகள் பேருந்து நிலையத்தின் உள்ளே வந்துசெல்கின்றன. நீண்ட தூரப் பேருந்துகள் பேருந்து நிலையத்தின் முன்பு நின்று பயணிகளை இறக்கிவிட்டுச் செல்கின்றன.
இன்னும் சில பேருந்துகள் பேருந்து நிலையத்தினுள் நுழைந்து, ஏதோ ஒரு இடத்தில் நிறுத்திப் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.
இதனால், பல்லடம் பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்துகள் எங்கு வந்துசெல்லும் என்று யாராலும் கணித்து நிற்க முடியாத நிலை நிலவுகிறது. பேருந்துகளில் ஏறி இடம் பிடிக்கப் பயணிகள் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு 9 மணிக்கு மேல் மதுரை,திருச்சி போன்ற பகுதிகளுக்கு செல்லும் நீண்ட தூரப் பேருந்துகள் மற்றும் திருப்பூர், உடுமலை, பொள்ளாச்சி பகுதிக்கு செல்லும் பேருந்துகளும் பல்லடம் பேருந்து நிலையத்தின் உள்ளே வருவதில்லை.
இதனால், பயணிகள் பேருந்து நிலையத்துக்கு வெளியே சாக்கடை கால்வாய் ஓரத்தில், கொசுக்கடியில் நின்றவாறு பேருந்துகளுக்கு காத்திருக்கும் நிலை உள்ளது.
24 மணி நேரமும் பேருந்துகள் வந்துசெல்லும் பல்லடம் பேருந்து நிலையத்தினுள் அனைத்து பேருந்துகளும் வந்துசெல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.