வெள்ளக்கோவிலில் விதைச்சோளம் கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த பல மாதங்களாகப் போதிய மழையில்லாததால் கால்நடைகளுக்குத் தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது ஓரளவு மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மானாவாரிப் பயிரான தானிய தீவனச் சோளத்தைச் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சோளத்தை (தானியத்தை) அறுவடை செய்து விட்டு, எஞ்சிய தட்டுகள் தீவனமாகப் பயன்படுத்தப்படுகின்றன. பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாவிட்டால் கூட, வரும் அடைமழை கால மழைநீரிலேயே சோளம் வளர்ந்து விடும். தற்போது பலரும் விதைப்புக்குத் தயாராகி வருவதால் வெள்ளை, மஞ்சள் ரக விதைச்சோளம் வேகமாக விற்பனையாகி வருகிறது.
உள்ளூர் நாட்டு ரகம் கிலோ ரூ. 45 - 65 வரை விலை போகிறது.
இதுகுறித்து, பாப்பம்பாளையம் விவசாயி முத்துக்குட்டி கூறியதாவது:
கடும் வறட்சிக்குப் பின் கிடைத்த மழையால் தீவனச் சோளம் பயிரிட்டுள்ளேன். விதைச்சோளம் விலை அதிகரித்துள்ளது. தனியார் சந்தைகளில் முளைப்புத் திறன் குறைந்த விதைச்சோளமும் புழக்கத்தில் உள்ளது. வேளாண் துறை சார்பில் குறைந்த விலையில் விதைச்சோளம் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.