பல்லடம் காரணம்பேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட அளவிலான மாட்டுச் சந்தை அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் ஆ.அண்ணாதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
பல்லடம் காரணம்பேட்டையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் பயன்பாடு இன்றிக் காணப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி எல்லையில் தென்னம்பாளையம் சந்தைப் பேட்டையில் மாட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை மதியம் வரை மாட்டுச் சந்தை நடைபெறுவதால் பல்லடம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட அளவிலான மாட்டுச் சந்தையை காரணம்பேட்டை பேருந்து நிலைய வளாகத்துக்கு மாற்றினால் கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களால் யாருக்கும் நெரிசல் ஏற்படாது. விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் எளிதாக வந்து போகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.