வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கான தேசிய வேளாண் சந்தை குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு திருப்பூர் விற்பனைக் குழுச் செயலாளர் எஸ்.ஆறுமுகராஜன் தலைமை வகித்தார். வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன், வேளாண் துறை அக்மார்க் அலுவலர் லீலாவதி, முத்தூர் விற்பனைக்கூட மேற்பார்வையாளர் ஸ்ரீரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பங்கேற்ற மத்திய அரசின் ஆய்வு மற்றும் சந்தைப்படுத்துதல் இயக்குநரக சென்னை மண்டல அதிகாரி வி.ஜி.கோகலே பேசியதாவது:
வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனைச் சாத்தியமாக்க விளைபொருள்களை நல்ல விலைக்குச் சந்தைப்படுத்துவது முக்கியமாகும். குறிப்பிட்ட விளைபொருள்களுக்கு, குறிப்பிட்ட சில இடங்களில் மிகக்குறைவான விலை கிடைக்கிறது. இதற்குக்கான காரணம், மாற்று வழி குறித்து ஆய்வு செய்து இ-நாம் என்கிற தேசிய வேளாண் சந்தை இந்தியா முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பல்வேறு மாநிலங்களில் 585 விற்பனைக்கூடங்களில் இச்சந்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் வழியாகக் கூடுதல் விலை கிடைக்கும் இடத்துக்கு இருக்கும் இடத்திலிருந்தே விளைபொருள்களை விற்பனை செய்து கொள்ளலாம். விற்பனைக்கூடங்களில் அக்மார்க் அலுவலர்கள் மூலம் தரம் 1, 2, 3 எனப் பொருள்கள் தர நிர்ணயம் செய்யப்பட்டு வாங்கும் வணிகர்களுக்கு உத்தரவாதம் தரப்படுகிறது. விற்பனைத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வந்த பிறகுதான் விளைபொருள்கள் அனுப்பப்படும்.அதிக விலைக்குக் கேட்ட வியாபாரி மறுக்காமல் பொருள்களை வாங்கியே ஆக வேண்டும். இந்த நடைமுறைகளை அதிகாரிகள் செயல்படுத்துவார்கள் என்றார்.
பின்னர், லக்கமநாய்க்கன்பட்டி, புதுப்பை, பெரியாத்திப்பாளையம் பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரடியாகச் சென்று தேசிய வேளாண் சந்தை குறித்து விவசாயிகளிடம் எடுத்துக் கூறினர்.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, பெதப்பம்பட்டி, வெள்ளக்கோவில் விற்பனைக்கூடங்களில் தேசிய வேளாண் சந்தை தொடங்கபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.