இறந்த கோழிகளை சேகரித்து விற்பனை செய்வோர் மீதும், அவற்றைப் பயன்படுத்தும் கடைக்காரர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இறந்த கோழிகளை கோழிப் பண்ணைகளில் இருந்து பெற்றும், பண்ணையாளர்களால் வீசப்பட்ட இறந்த கோழிகளைச் சேகரித்தும் மாநகரில் உள்ள மதுக் கூடங்கள், தள்ளுவண்டிக் கடைகளுக்கு சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் வந்துள்ளன.
அதன் அடிப்படையில், மாநகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், போலீஸார் பல்லடம் சாலையில் வாகனச் சோதனை மேற்கொண்டதில், இரு தினங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 60 இறந்த கோழிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதுதொடர்பாக கணேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், இறந்த கோழிகளை சுல்தான்பேட்டையில் செயல்பட்டு வரும் இறைச்சி கோழிப் பண்ணை உரிமையாளர் மாரிமுத்துவிடமிருந்து, தலா ரூ. 10 விலையில் வாங்கியது தெரியவந்தது. தவறை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டனர்; இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இறைச்சிக் கோழிப் பண்ணை உரிமையாளர்கள், இறந்த கோழிகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். மாறாக, இதுபோன்று சட்டவிரோதமாக, இறந்த கோழிகளை சேகரித்து விற்பனை செய்யும் விற்பனையாளர், இறைச்சி கோழிப் பண்ணையாளர்கள், அவற்றைப் பயன்படுத்தும் தள்ளுவண்டிக் கடைக்காரர்கள், அசைவ உணவு விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டு, கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.