உணவு விதியை மாற்றும்போது நோயாளிகள் ஆகிறோம் என்று திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் தெரிவித்தார்.
திருப்பூர் வள்ளலார் நகர் தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி பள்ளி மாணவர்களின் ஓவியம் மற்றும் கைவினைக் கண்காட்சி நடைபெற்றது. இதில், திரைப்பட இயக்குநரும், செம்மை வனம் நிறுவனருமான ம.செந்தமிழன் கலந்து கொண்டு பேசியதாவது:
மரபு நோக்கி தற்போதைய இளம் தலைமுறையின் சிந்தனை திரும்பியுள்ளது. இயற்கை வழி வேளாண்மை, இயற்கை மருத்துவம், மரபு வழிக்கல்வி என தற்போது தமிழர்களின் மரபு நோக்கிய சிந்தனை வெடித்துக் கிளம்பும் காலம் இது.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் கம்பு, கேழ்வரகு சாப்பிட்டு நாள் முழுவதும் உடல் உழைப்பில் ஈடுபட்டோம். நாட்டுச்சோளத்தை சோறாக்கியும், கூழாக்கியும் சாப்பிட்டோம், அரிசி சாப்பிடுபவர்கள் அன்றைக்கு பெரிய மனிதர்களாக பார்க்கும் நிலை கிராமங்களில் இருந்தது. இன்றைக்கு காலையில் நடைப்பயிற்சி செல்பவர்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கம்பங்கூழ், கேப்பங்கூழை தேடி வாங்கி அருந்துகிறார்கள். இதுதான் உணவு என்பதை இன்று புரிந்துள்ளனர். உணவு விதியை மாற்றும்போது நோயாளிகள் ஆகிறோம் என்றார்.
நிகழ்வில், தாய்த்தமிழ் பள்ளி முதல்வர் கு.ந.தங்கராஜ் வரவேற்றார். கலகல வகுப்பறை சிவா உள்பட பலர் பங்கேற்றனர்.