திருப்பூரில் ஏ.கே.ஆர். அகாதெமி பள்ளி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருப்பூர், பெருமாநல்லூர் சாலை, சூர்யா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் இப்பள்ளி வளாகம் அருகே தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, லட்சுமி நகர் முதல் வீதி, 50 அடி சாலை, ஈஸ்வரன் கோயில் வீதி வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. அப்போது, மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழலைக் பேணிக் காப்போம், பூமியைப் பாதுகாப்போம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு சென்றனர்.
பேரணியை பள்ளித் தலைவர் குப்புசாமி தலைமைவகித்து தொடக்கி வைத்தார். பள்ளித் தாளாளர் லட்சுமி நாராயணன் வரவேற்றார். முதல்வர் கலைமணி சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். பேரணியில் முதல் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் 160 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.