உடுமலை பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஜிவிஜி கல்லூரி: உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் 5 வகை பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொங்கல் பொங்கி வருவதைப் பார்த்த மாணவிகள் குலவையிட்டு மகிழ்ந்தனர். மேலும் கோமாதா பூஜையும் நடைபெற்றது. இதன் பின்னர் பேராசிரியர்கள், மாணவிகள் இணைந்து கும்மியாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய நடனங்களையும் ஆடினர்.
இதைத் தொடர்ந்து, உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஒருங்கிணைப்பாளர் ந.ஜெயந்தி, பேராசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கல்லூரி செயலர் கெ.ரவீந்திரன், முதல்வர் கி.புனிதவல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்.ஜி.எம். பள்ளியில்...: உடுமலை ஆர்ஜிஎம் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திறந்த வெளியில் புது அடுப்பு மூட்டப்பட்டு மண் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பின் சூரியனுக்கு பொங்கல் படையலிடப்பட்டது. அப்போது மாணவ, மாணவிகள் பொங்கலோ பொங்கல் என முழக்கங்கள் எழுப்பி சூரிய வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து கும்மியடித்து ஆடினர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. முதல்வர் ஜெ.விஜயலட்சுமி தலைமையில் ஆசிரியர்கள்இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.