விதை விற்பனை உரிமம் பெற்ற தனியார் விதை விற்பனையாளர்களுக்கு இணையதள மற்றும் செல்லிடப்பேசி விதை செயலி குறித்த செயல்விளக்க பயிற்சி முகாம் தாராபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை விதை சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறை சார்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு, விதை ஆய்வு துணை இயக்குநர் சி.சண்முகம் தலைமை வகித்தார்.
முகாமில் விதை விற்பனையாளர்கள் தங்களது விதை விற்பனை நிலையத்தில் விதைகள் விவரம் மற்றும் விற்பனை செய்யப்பட்டுள்ள விதைகள் விவரம் ஆகியவற்றை தங்களுடைய செல்லிடப்பேசியில் உள்ள விதைச்செயலி (ம்ர்க்ஷண்ப்ங் ள்ங்ங்க் ஹல்ல்) மூலம் தாங்களாகவே பதிவு செய்யும் முறை தற்போது விதை சான்று துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி விதை விற்பனையாளர்கள் தங்களது விதை விற்பனை நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் விதைகளைப் பயிர், ரகம், இனம் மற்றும் அளவு வாரியாக விதைச்செயலியில் பதிவு செய்யப்படவேண்டும். அதேபோல் விற்பனை செய்யப்பட்ட விதைகளின் விவரமும் முழுமையாக பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்தப் பதிவானது பிரதிவாரம் வெள்ளிக்கிழமை தவறாமல் பதிவு செய்யப்படவேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்யப்படுவதால் விற்பனையாளர்களின் உண்மையான கொள்முதல் மற்றும் விற்பனை விவரத்தையும் தற்போது இருப்பில் உள்ள விதைகளின் விவரத்தையும் வட்டார வாரியாக மாநிலம் முழுவதும் விதை சான்று துறையினரால் அறிந்து கொள்ளமுடியும்.
இதனால் விற்பனை செய்யப்படும் விதைகளின் தரத்தையும், விவசாயிகளின் தேவைக்கேற்ற விதை இருப்பு விவரத்தையும் கண்காணிக்க இயலும் என விதை ஆய்வு துணை இயக்குநர் சி.சண்முகம் விளக்கினார்.
முகாமில் விதை விற்பனையாளர்கள் உரிமத்தினை உரிய காலத்தில் புதுப்பித்துகொள்ள வேண்டும். விதை இருப்பு விவரத்தினை இருப்பு பதிவேட்டில் இருப்பு வைத்து முறையாக பராமரிக்கப்பட வேண்டும். விதை விற்பனை பட்டியலில் விதையின் முழு விவரத்துடன் கையொப்பம் பெற்றுதான் விற்பனை செய்யப்பட வேண்டும். காலாவதியான விதைகளை இருப்பு வைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.
விதைகளை முறையாக சேமித்து வைக்கவேண்டும். விதை உரிமமின்றி விதை விற்பனை செய்பவர்கள் மீது விதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட விதை விற்பனையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விதை ஆய்வாளர்கள் ப.கணேசன்(தாராபுரம்), இ.விஜயா(காங்கயம்), வெ.மகாலிங்கம்(பவானி), கு.மதுமலர்(ஈரோடு) ஆகியோர் எடுத்துரைத்தனர்.
முகாமில் தாராபுரம், காங்கயம், குண்டடம், மூலனூர் வட்டாரங்களைச் சேர்ந்த விதை விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.