பல்லடம், மலையம்பாளையத்தில் விவசாயக் கிணற்று நீரை விற்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் வட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து பல்லடம் வட்டாட்சியர் சுப்பிரமணியத்திடம், அப்பகுதி மக்கள் அளித்த மனு விவரம்:
பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சியிலுள்ள மலையம்பாளையம் கிராமம், விவசாயத் தொழில் நிறைந்த பகுதியாகும்.
நிலத்தடி நீரை நம்பியே இங்கு விவசாயம் நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஆழ்துளைக் கிணற்று நீரையே நம்பியுள்ளனர்.
இந்த நிலையில், விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் விற்கப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. தண்ணீர் விற்கமாட்டோம் என்று கடந்த மாதம் லாரி உரிமையாளர்கள் உறுதி அளித்தனர். இருந்தும் தண்ணீர் விற்பனையை நிறுத்தாததால் லாரியை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தோம். ஆனால், தற்போதும் விவசாய கிணற்று நீர் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, தண்ணீர் விற்பனையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பல்லடம் வட்டாட்சியர் உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.