பொங்கல் பண்டிகையை ஒட்டி மொச்சைப் பயறு கிலோ ஒன்றுக்கு ரூ.150 வரை சந்தையில் சனிக்கிழமை விற்கப்பட்டது. போதிய விளைச்சல் இல்லாததே இதற்குக் காரணம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, மஞ்சள், வெல்லம் ஆகியவற்றுடன் மொச்சைப் பயிறும் முக்கிய இடம் பிடிக்கும். 90 நாள் மானாவாரிப் பயிரான மொச்சைப் பயறு செம்மண் நிலத்தில் விளைவது. உடுமலையில் ஆண்டிப்பட்டி, எலையமுத்தூர், தளி, ஜல்லிபட்டி, தும்பலப்பட்டி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிதியை ஒட்டிய பகுதிகளிலும், உடுமலையின் வட பகுதியிலுள்ள தாந்தோனி, புக்குளம் உள்ளிட்ட கிராமங்களிலும் விவசாயிகள் இதனைப் பயிரிட்டிருந்தனர்.
மொச்சைப் பயறை வழக்கமாக மார்கழி மாத இறுதியில் அறுவடை செய்யத் திட்டமிட்டுப் பயிரிடுவார்கள். ஆனால் இந்த வருடம் மழை குறைந்ததால் கால தாமதமாகப் பயிரிட்டனர். இதனால் திட்டமிட்டபடி பொங்கல் பண்டிகையை ஒட்டி மொச்சைப் பயறை விவசாயிகள் சந்தைக்குக் கொண்டுவர முடியாததால் அறுவடை குறைந்தது.
இதனால் வழக்கமாக ஒரு கிலோ ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்கப்படும் மொச்சை பயறு தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ. 150 வரை சந்தையில் விற்கப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் சனிக்கிழமை கூறியது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொச்சைப் பயறு வரத்து அதிகமாக இருக்கும். இதனால் விலை குறைவாக விற்கப்படும். இந்த ஆண்டு குறிப்பிட்ட பருவத்தில் மொச்சையைப் பயிரிட முடியாமல் போனது. இதனால் மார்கழி மாதக் கடைசியில் அறுவடை செய்ய முடியவில்லை.
இதனால் சந்தையில் உள்ள வியாபாரிகள் ஒட்டன்சத்திரம், அன்னூர், புளியம்பட்டி பகுதிகளிலுள்ள சந்தையில்
இருந்து இந்த வருடம் பொங்கலுக்கு மொச்சைப் பயறைக் கொ ண்டு வந்து விற்கிறார்கள். இதன் காரணமாக மொச்சைப் பயறு விலை உயர்ந்துள்ளது என்றனர்.