திருப்பூரில் முதல்முறையாக நடத்தப்பட்ட அரசுப் பொருள்காட்சியை 61 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக அரசுப் பொருள்காட்சி கடந்த 2017 டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பொருள்காட்சி 45 நாள்கள் வரை நடைபெற்று, ஜனவரி 17-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
பொருள்காட்சியில் பொது மக்கள் பார்த்து பயன்பெற்றுச் செல்லும் விதமாக அரசின் நலத் திட்டங்கள், திட்டம் பெறுவதற்கான 30 அரசுத் துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. திட்டங்கள் குறித்து ஒவ்வொரு கண்காட்சி அரங்கிலும் எடுத்துரைக்கப்பட்டதுடன், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கும் விதமாக, உணவு விடுதிகள், விளையாட்டு அம்சங்கள் அமைக்கப்பட்டதுடன், நாள்தோறும் நலிவுற்ற கலைஞர்கள் மூலமாக விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தப்பட்டன.
இந்தப் பொருள்காட்சியை மொத்தம் 61 ஆயிரத்து 481 பேர் நுழைவுக் கட்டணம் செலுத்தி பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அதன் மூலமாக அரசுக்கு ரூ. 6 லட்சத்து 75 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.