அவிநாசியில் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி, அவரது வீட்டை இடித்துச் சேதப்படுத்தி வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை அவிநாசி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அவிநாசியை அடுத்து பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (48). ஆட்டோ ஓட்டுநரான இவர், தனது குடும்பத்துடன் இந்திரா காலனி பகுதியில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் வாடகை, உரிமை தொடர்பாக மாரன் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாக குப்புசாமிக்கு கருத்து வேறுபாடு நிலவிவருகிறது.
இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே ஜனவரி 11-ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்பட 7 பேர் திடீரென குப்புசாமியை மிரட்டி, வீட்டைக் காலி செய்யுமாறு கூறி, வீட்டையும் சேதப்படுத்தி, குப்புசாமியையும் தாக்கியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குப்புசாமி அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய ரங்கசாமி (37), ரவி (22), கார்த்தி (22) ஆகிய மூவரையும் அவிநாசி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.