சந்திர கிரகணத்தை முன்னிட்டு, தைப்பூசத் திருவிழா தேரோட்டத் தொடக்க நிகழ்ச்சி ஜனவரி 31-ஆம் தேதி காலையில் நடைபெறவுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி மலைக் கோயிலில் தைப்பூசத் திருவிழா சிவன்மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் ஜனவரி 22-ஆம் தேதி தொடங்குகிறது. தினமும் சிறப்பு வழிபாடு நடைபெற்று, பிப்ரவரி 9-ஆம் தேதி விழா நிறைவடைகிறது.
இதில், தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் 3 நாள்கள் நடைபெறவுள்ளது. பொதுவாக சிவன்மலை முருகன் கோயிலில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மாலையில்தான் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த வருடத்தின் தேரோட்ட முதல் நாளான ஜனவரி 31-ஆம் தேதி மாலையில் சந்திர கிரகணம் நிகழவுள்ளதால், தேரோட்டத் தொடக்க விழா அன்றைய தினம் காலை 10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து பக்தர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் பொருட்டு, கோயிலின் மூலவர் இருப்பிடத்துக்கு முன்பு, கோயிலின் ஆண்டவர் உத்தரவுப் பெட்டி மற்றும் கொடி மரம் ஆகியவற்றின் அருகே அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. தைப்பூசத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை மாவட்ட உதவி ஆணையர் எஸ்.வி.ஹர்ஷினி, உதவி ஆணையர் எம்.கண்ணதாசன் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் செய்து வருகின்றனர்.