வெள்ளக்கோவிலில் வீடு புகுந்து திருடிய நபரை காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
வெள்ளக்கோவில், வீரக்குமார் நகரைச் சேர்ந்தவர் கணேசன் (55). சமையல் வேலை செய்து வருகிறார். இவர், தனது வீட்டைப் பூட்டாமல், பக்கத்து வீட்டுக்காரருடன் வெள்ளிக்கிழமை பேசிக் கொண்டிருந்துள்ளார்.
சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த செல்லிடப்பேசி, டி.வி. ஆகியவற்றைக் காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், காங்கயம் சாலை, பழைய பேருந்து நிலையம் அருகில் ஒருவர் டிவியுடன் நின்று கொண்டிருந்துள்ளார். விசாரணையில், அவர் சின்னதாராபுரம் அருண்குமார் (31) என்பதும், கணேசன் வீட்டில் திருடியதும் தெரியவந்தது.
அவரைக் கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த செல்லிடப்பேசி, டிவியை மீட்டனர்.