திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலூரில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவ்வழியாக வந்த 4 கார்கள், தனியார் பேருந்து ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாயின. இதில் 10- க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவிநாசியில் இருந்து கோவை நோக்கி சரக்கு ஆட்டோ திங்கள்கிழமை மதியம் சென்று கொண்டிருந்தது. தெக்கலூர் அருகே புறவழிச்சாலையில் செல்லும்போது நிலைதடுமாறிய சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அந்த வழியாக வேகமாக வந்த 4 கார்களும் அடுத்தடுத்து மோதின.
மேலும் கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து அங்கு நின்றிருந்த 4 கார்கள் மீதும் மோதியது. இதில் பேருந்து உள்பட 5 வாகனங்களிலும் வந்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் திருப்பூர், கோவை, அவிநாசி உள்ளிட்ட தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் கோபி பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (36) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவிநாசி போலீஸார் விசாரிக்கின்றனர்.