திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அருகே வினோபா நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் சஞ்சீவிநாதன் (28). எம்ப்ராய்டரி இயந்திரம் சர்வீஸ் பொறியாளரான இவர், தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊத்துக்குளி நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தார்.
திம்மநாயக்கன்பாளையம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது ஈரோட்டிலிருந்து திருப்பூர் நோக்கி அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சஞ்சீவிநாதன் தூக்கிவீசப்பட்டு 25 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அங்கிருந்த மின்கம்பியில் பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்து பாலத்தின் மீது ஏறி நின்றது. இதில் பேருந்தில் இருந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.