பெரியார் சிலை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட ஹெச்.ராஜாவை கண்டித்து காங்கயம் தாலுகாவில் பலவேறு இடங்களில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் எனக் கூறிய பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவைக் கண்டித்தும் காங்கயம் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புரட்சிகர இளைஞர் முன்னணி, திராவிடர் கழகம் சார்பில் காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகம், நத்தக்காடையூர், நான்கு சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கயம் பகுதி தி.க. ஒன்றியச் செயலாளர் ஸ்ரீதர், புரட்சிகர இளைஞர் முன்னணிப் பொறுப்பாளர் அப்புக்குட்டி, புரட்சிகர தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.