பல்லடம் அருகே ஆறாக்குளம் பிரிவில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜனிடம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினர்.
பல்லடத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜனை அவரது அலுவலகத்தில் சந்தித்த ஆறாக்குளம்,கோடங்கிபாளையம்,பருவாய் கிராம மக்கள் அளித்த மனு விவரம்:
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக்குளம் பிரிவில் உள்ள தோட்டத்தில்புதியதாக டாஸ்மாக் கடை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தனியார் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி, நூற்பாலை, தனியார் நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகியன உள்ளன. அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் மக்களுக்கு பெரிதும் இடையூறாக இருக்கும். எனவே, அந்தக் கடையை வேறு இடத்துக்கு மாற்றி அமைத்திட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனர்.