தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவரை திருப்பூர் மாநகர தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய காவல் ஆணையர் பொ.நாகராஜன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், துணை ஆணையர் ஏ.கயல்விழி மேற்பார்வையில், உதவி ஆணையர் அண்ணாதுரை தலைமையில், அனுப்பர்பாளையம் காவல் ஆய்வாளர் கே.டி.ராஜன் பாபு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.
அசில், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அனுப்பர்பாளையம் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மூன்று திருட்டு வழக்குகளில் தொடர்புடைய திண்டுக்கல், கிழக்கு மாரியானந்தபுரத்தை சேர்ந்த பி.செல்வராஜ் (54), ரவிச்சந்திரன் (52) ஆகியோரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 24 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், செல்வராஜ் மீது திண்டுக்கல், திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், ஒரு கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, திருப்பூர், அமராவதிபாளையம் பகுதியில் கடந்த 10-ஆம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், பணம் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக, கும்பகோணம், ஆவூர், காந்தி நகரைச் சேர்ந்த என்.மணிகண்டன் (32) என்பவரை ஊரகக் காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனர்.