குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் மற்றும் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை ஒன்றியம், குரல்குட்டை ஊராட்சிக்கு உள்பட்ட முருக்கத்தி பள்ளம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக இந்தப் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பெண்கள் உடுமலை ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தங்களது கோரிக்கை மனுவை ஒன்றிய அதிகாரிகளிடம் அளித்தனர். இன்னும் சில நாட்களில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் அப்போது உறுதி மொழி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.