பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா, நல்லாசிரியர் விருது வழங்கும் விழா, சட்டப் பேரவை உறுப்பினருக்கு பாராட்டு விழா ஆகியவை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.முருகானந்தம் தலைமை வகித்தார். பட்டயத் தலைவர் தங்கலட்சுமி நடராஜன் வரவேற்றார்.
கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப்பை திருப்பூர் ஏ.வி.பி.கல்வி நிறுவனங்களின் தலைவர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் அரசு கலைக் கல்லூரி நாயகன் விருது பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜனுக்கும், நல்லாசிரியர் விருது அரசு கல்லூரி துணை முதல்வர் ஆர்.ஜெயச்சந்திரனுக்கும், அண்ணா நகர் அரசு பள்ளி ஆசிரியை த.சுகன்யாவுக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.சித்துராஜ், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் சூ.தர்மராஜன், சமூக ஆர்வலர் ஆ.அண்ணாதுரை, ரோட்டரி சங்க நிர்வாகிகள் திருப்பூர் பி.பாலசுப்பிரமணியம், வி.என்.முத்துராமலிங்கம், பி.கண்ணன், கௌசிக், செல்வக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். மாணவர் எம்.சரவணக்குமார் நன்றி கூறினார்.