தருமபுரியில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயில் அளவு 100 டிகிரி முதல் 105 வரை வாட்டி வதைத்தது. மேலும், பகல் வேளையில் கடுமையான அணல் வீசியது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை திடீரென மழை பொழிந்தது. இதனால், மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்தது.
இதே போல், வெள்ளிக்கிழமை மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, தருமபுரி நகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையோரம் இருந்த இரண்டு மரங்கள் முறிந்து விழுந்தன. அதன் அருகிலிருந்த இரு மின்கம்பங்களும் சாய்ந்தன. நகரின் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதேபோல, பென்னாகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கோடையில் பெய்த மழையால், கடந்த சில நாள்களாக கடுமையான வெயிலின் காரணமாக அவதியுற்று வந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில், வியாழக்கிழமை பெய்த மழையளவு (வெள்ளிக்கிழமை காலை பதிவான நிலவரம் மி.மீட்டரில்): தருமபுரி-30, பாலக்கோடு-7, பென்னாகரம்-2.60, ஒகேனக்கல்-2.60. சராசரி 6.03.