தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வனப் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டவருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
பாலக்கோடு வனச் சரகத்தில் மணல் திருட்டு நடைபெறுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், பாலக்கோடு வனச் சரகர் எஸ்.ஜெகதீசன் தலைமையில், வனவர் செல்வம், வனக் காப்பாளர்கள் என்.சின்னசாமி, எம்.கல்யாண சுந்தரம், கே.சங்கர் உள்ளிட்டோர் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.
இதில், சீராண்டாபுரம் காப்புக்காட்டில், வாக்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் டிராக்டர் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தார். இதையடுத்து, அத்துமீறி, வனப் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட அவர் மீது வழக்குப் பதிவு செய்து, ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
வனப் பகுதியில் மணல் எடுத்துச் சென்றால், வன விலங்குகளுக்கு தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவை குடியிருப்புப் பகுதிகளுக்கு நுழைந்து சேதத்தை ஏற்படுத்துகின்றன.
எனவே, வன விலங்குகளின் நலன் கருதி, காப்புக் காடுகளில் யாரும் மணல் அள்ளக்கூடாது. மீறி எடுப்பவர்கள் மீது வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனறு மாவட்ட வன அலுவலர் க.திருமால் தெரிவித்தார்.