தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.
கிருஷ்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் ரா.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
டி.துறிஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் பெ. ரமேஷ் செய்திருந்தார்.
நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு ஊர்வலத்தை மாநில சுகாதாரத் துறைச் செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போதே பள்ளி மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் (பொ) அ. சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடற்புழு: மூக்கனஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை மற்றும் உடல் நலச் சங்கம் சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் சின்னமாது தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியை யமுனா முன்னிலை வகித்தார். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் மு.கா.நெடுமாறன் செய்திருந்தார்.