அரூரை அடுத்த வேலனூரில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிட்லிங் ஊராட்சி வேலனூரில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்ற முகாமில், வட்டாட்சியர் அ.செல்வராஜ் தலைமை வகித்தார். முதியோர் உதவித் தொகை, ஜாதிச் சான்று, புதிய குடும்ப அட்டைகள், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம், கல்வி உதவித் தொகைகள், குடிநீர் மற்றும் சாலை வசதிகள் உள்பட 35 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு அரசு மருத்துவர் சி.அருண்பிரசாத், கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன் ஆகியோர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து, டெங்கு நோய் பரவுதல், தடுப்பு முறைகள் குறித்த கண்காட்சிகள் முகாமில் இடம் பெற்றன. இதில், கிராம நிர்வாக அலுவலர் முரளி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.