கொடிநாள் நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என தருமபுரி ஆட்சியர் கே.விவேகானந்தன் அறிவுறுத்தினார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடிநாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, தேசிய மாணவர் படையினரிடம் கொடிநாள் நிதியை வழங்கி, வசூலை தொடங்கி வைத்து அவர் பேசியது: தருமபுரி மாவட்டத்துக்கு கடந்த 2016-17-ஆம் ஆண்டில் தமிழக அரசால் கொடிநாள் நிதி நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.46,24,000 ஆகும். ஆனால், இந்த இலக்கை காட்டிலும் ரூ.47,75,000-க்கும் மேல் வசூல் செய்து 103 விழுக்காடு எய்தி சாதனை செய்யப்பட்டது.
நிகழாண்டுக்கு (2017-18) அரசு இலக்கு ரூ.51,00,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டும் கொடிநாள் வசூலுக்கு நிதியை தாராளமாக வாரி வழங்கிட வேண்டும் என்றார்.
விழாவில், 35 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, கல்வி உதவித்தொகை மற்றும் கண் கண்ணாடி மானிய நிதியுதவியாக ரூ.2,93,500 வழங்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் விஜயகுமார், முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகப் பணியாளர்கள், தேசிய மாணவர் படையினர், ஊர்க்காவல் படையினர், 150-க்கும் மேற்பட்ட முன்னாள் படை வீரர்கள் கலந்துகொண்டனர்.