தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள ஸ்ரீ தட்சணகாசி காலபைரவர் கோயிலில் அஷ்டமிப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 6 மணி முதல் கால பைரவருக்கு அஷ்டமி பைரவர் யாகம், அஷ்டமி லஷ்மி யாகம், தனகார்சன குபேர யாகம், அதிருத்ர யாகம் ஆகியவை நடைபெற்றன. இவற்றைத் தொடர்ந்து ராஜ அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 64 வகையான அபிஷேகம், 1008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள், நான்கு வேத பாராயணம், சிறப்பு உபசார பூஜைகள் ஆகியவையும் நடைபெற்றன.
இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை குருதியாகமும் ந டைபெற்றது. விழாவில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் பெங்களூரு பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போச்சம்பள்ளியில்...
போச்சம்பள்ளியிலிருந்து செல்லம்பட்டி செல்லும் சாலையில் அண்ணாமலைபுதூரில் 150 அடி உயர மல்லிக்கல் மலை உச்சியில் 500 ஆண்டுகால பழமைவாய்ந்த காலபைரவர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவருக்கு அஷ்டலட்சுமி யாகம், குபேர யாகம், அஷ்ட லட்சுமி யாகம், தனகார்சன் அதிருத்ரய யாகம் உள்பட பல்வேறு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் நடைபெற்றன. பின்னர் வேத பாராயணம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதைத் தொடர்ந்து கால பைரவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.