மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 104 மருத்துவ ஆலோசனை தொடர்பு சேவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது (படம்).
24 மணி நேரமும் இயங்கும் மருத்துவ உதவிகள், ஆலோசனைகள், தகவல்கள் குறித்த சேவை எண் 104 கடந்த 2013 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த எண் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், பரிசோதனை வசதிகள், தாய்-சேய் நல மையங்கள், ரத்த வங்கி, கண்தானம், கண் வங்கி, உறுப்பு தானம், விஷ முறிவு சிகிச்சை மையங்கள், தொற்றும் தொற்றா நோய்கள், அறிகுறிகள், மனநல ஆலோசனை போன்றவற்றையும் இந்த எண்ணில் (104) தொடர்பு கொண்டு பெறலாம்.
மாவட்ட ஆட்சியர் (பொ) அ. சங்கர் தலைமை வகித்து நிகழ்ச்சியைப் பார்வையிட்டார். குடும்ப நல மாவட்ட அலுவலர் ராமன், ஒருங்கிணைப்பாளர் வி. சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.