சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த இருளர் இன மக்கள், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாரம்பரிய நடனமாடினர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் பொம்மஅள்ளி ஊராட்சி அண்ணா நகரைச் சேர்ந்த இருளர் சமூக மக்கள் திங்கள்கிழமை குழுவாக தருமபுரி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பழங்குடியினர் என்ற பிரிவின் கீழ் சாதிச் சான்றிதழ் கேட்டு பலமுறை போராடியும் அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும், இதனால் குழந்தைகள் கல்வியைத் தொடர முடியாமல் தவிப்பதாகவும் கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாரம்பரிய நடனம் ஆடத் தொடங்கினர்.
இதையறிந்த, கோட்டாட்சியர் ராமமூர்த்தி இருளர் இன மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட பின்னர் சாதிச் சான்றிதழ் வழங்குவதாக அவர் உறுதி அளித்ததால் நடனத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.